
இந்திய முஸ்லிம்களுக்கு நாலாபுறமும் நெருக்கடிகள்




இந்திய முஸ்லிம்களுக்கு நாலாபுறமும் நெருக்கடிகள் சூழ்ந்து வரும் சூழலில் தொலைநோக்கு இலகுடைய கல்விப் பணிகளின் மூலமாக மட்டுமே அடுத்த தலைமுறையை ஆற்றல் மிக்கத் தலைமுறையாக உருவாக்கிட முடியும்.இதை மிகச்சரியாக புரிந்து கொண்ட பல உலமாக்களும் ஜமாஅத் நிர்வாகங்களும் தங்கள் முஹல்லாக்களில் தொடர்ச்சியான கல்விப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட அரசு காஜி தலைமையில் இயங்கும் அல் முஹ்ஸின் சமூக நலக்குழு, மதீனா மஸ்ஜித் நிர்வாகம், உதகை ஐக்கிய ஜமாஅத் ஆகிய அமைப்புகள் இனைந்து நடத்திய உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஊட்டியில் நடைபெற்றது.
பெரும்பாலும் சுற்றுலாத் துறையை சார்ந்த சிறு குறு வியாபாரிகளாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இனிவரும் காலங்களில் தங்களது பிள்ளைகளை மேற்குத் தொடர்ச்சி மலைப் பொருளாதாரத்தின் வல்லுனர்களாக உருவாக்கிடும் உயர்கல்வி ஆராய்ச்சிப் பிரிவுகளை முன்வைத்து பயிற்சியளித்தோம்.
உயிரியல் பிரிவு மாணவர்கள் தாவரவியல் {Botany} தோட்டக்கலை {Horticulture} மலர் உற்பத்தி {Floriculture} நீரியல் வளர்ப்பு { Hydrophonics} உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிக் கல்வி {PhD} மேற்கொள்ள வேண்டும்.
அலங்காரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் ஊட்டியின் ரோஜா மலர்களை சவூதியின் தாயிஃப் பகுதி ரோஜா மலர்களுக்கு நிகராக திறன் மேம்படுத்துகிற ஆராய்ச்சிக்கல்வியை முன்னெடுத்தால் அத்தர் உற்பத்தியில் சர்வதேச தொழில் முனைவோர்கள் உருவாகும் சூழல் உண்டாகும் என்ற கருத்தை ஆதாரங்களுடன் பதிவு செய்தோம்.
அதுபோன்று ஆராய்ச்சிக்கல்வியை முன்னெடுக்கும் மாணவர்களுக்கு முழு கல்வி கட்டணத்தையும் செலுத்துவதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமைப்புகளும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கமும் தயாராக இருப்பதையும் கவனப்படுத்தினோம்.


